உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 06, 2011

இணையதளம் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள்

           மாணவர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள 90 உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணையதளம் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  

               சென்னை அறிவியல் நகரம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.  நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு சேர்க்கிறது. உலகின் எந்தப் பகுதியில் உள்ள தகவல்களையும் மக்கள் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் அறியக்கூடிய வகையில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.  இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நூலகங்களிலும் அமல்படுத்தும் முயற்சியை தமிழக பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது.  

               அதாவது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள மைய நூலகங்களை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இணைய தளம் மூலம் இணைக்கும் பணியை பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒரு பகுதியில் இருந்து கொண்டே, மாநிலத்தின் 32 மைய நூலகங்களிலும் என்னென்ன நூல்கள் மற்றும் அரிய தகவல்கள் உள்ளன என்பதை மக்கள் அறிய முடியும்.  

                  இதுபோல், உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் பணியையும் சென்னை அறிவியல் நகரம் மேற்கொண்டுள்ளது.  அதாவது, சென்னையில் உள்ள ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கணித அறிவியல் நிறுவனம், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் என 90 உயர் கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் நூலகங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.  

இதுகுறித்து அறிவியல் நகர துணைத் தலைவர் வி.கே. சுப்புராஜ் கூறியது:  

              சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் நிறைவடைய உள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  புத்தகங்களை மாணவர்கள் தேடி அலையவேண்டிய அவசியம் இனி இருக்காது. குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் என்னென்ன நூல்கள் உள்ளன என்பதை இணையதளம் மூலமே மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்றார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior