உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 22, 2010

என்.எல்.சி. பேச்சுவார்த்தை தோல்வி

                    மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
                   சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், 20 சதவீத போனஸ் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து என்.எல்.சி.நிர்வாகத்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
                  இந்நிலையில் 3-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தம் நீடித்தது.இதையடுத்து தொ.மு.ச. (திமுக), ஏ.டி.பி. (அதிமுக), ஐ.என்.டி.யூ.சி (காங்கிரஸ்)., பி.டி.எஸ். (பாட்டாளி மக்கள் கட்சி), எல்.எல்.எஃப். (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) மற்றும் சிஐடியூ, ஏஐடியுசி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன், சென்னையில் உள்ள மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.முதல்கட்டமாக ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தைச் சேர்ந்த சேகர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 
                      இதில் உடன்பாடு ஏற்படாததால், அச்சங்கத்தினர் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துவிட்டு வெளியேறினர்.  இச்சங்கத்தின் சார்பில் நெய்வேலியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 25-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.இரண்டாவது கட்டமாக தொ.மு.ச. ஏ.டி.பி. உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பினருடன், பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, என்.எல்.சி. நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத 500 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூட்டமைப்பினர் சார்பில் கோரப்பட்டது. 
                    ஆனால், ஒரே நேரத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்டவே இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: 

                தொழிலாளர்களின் பிரச்னைகள் பேச்சுவார்த்தையின்போது சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம். ஆனால், தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவே என்.எல்.சி. நிர்வாகம் செயல்படுவதாகத் தோன்றுகிறது. நிர்வாகத்தின் சார்பில் ஊதிய உயர்வு வழங்குவதாக பலமுறை உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை. எனவே, ஊதிய உயர்வு அறிவிக்கும் வரையில், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று 7 தொழிற்சங்கங்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டது என்று பிரதிநிதிகள் குள்ளபிள்ளை, நாராயணசாமி, ஸ்டாலின், தேவராஜ் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், நெய்வேலியில் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
                        
                  என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் துணை பொது மேலாளர் பெரியசாமி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் சிவராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior