உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 08, 2011

கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடக்கம்: சட்டசபையில் அறிவிப்பு

கடலூர் : 
            கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கபட்டதையடுத்து தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் கவர்னர் உரையில் கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூரில் தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 
          மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் தமிழரசன், இளங்கோவன், பூங்காவனம், கணபதி, ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். 

நெல்லிக்குப்பம்: 

              நகர தி.மு.க., சார்பில் செயலர் மணிவண்ணன் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கினர். நெசவாளரணி பழனிசாமி, பொருளாளர் ஜெயசீலன், துணை செயலர் தனகோடி, அருணகிரி, இளைஞரணி பார்த்தசாரதி, சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். 

விருத்தாசலம்: 

               நகர செயலர் தண்டபாணி, கவுன்சிலர்கள் அரங்க பாலகிருஷ்ணன், ராமு, வாசு சுந்தரேசன், இளைஞர் அணி பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆளுனர் உரை  


           இந்திய மருத்துவ,  ஹோமியோபதி பல்கலைக்கழகம்  சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவக் கல்லூரிகளை அரசே நடத்தி வருகிறது. பாரம்பரியம்மிக்க இந்திய மருத்துவத்தையும், ஹோமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க, இப்போதுள்ள 6 அரசு இந்திய மருத்துவ, ஹோமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி இந்திய மருத்துவ, ஹோமியோபதி பல்கலைக்கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும் என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.  

புதிய கல்லூரிகள்  

                 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தருமபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 5 இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் புதிதாக விவசாயக் கல்லூரி தொடங்கப்படும்.  தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்  வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும் தோட்டக்கலைக்காக தனியே, "தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்' கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு தொடங்கப்படும். 

 80 ஆயிரம் மாணவர்கள் 

                  முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தொழிற்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 80,450 மாணவர்கள் இந்த ஆண்டு பயன்பெற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பிற முக்கியத் திட்டங்கள்  

              கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.  மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. 

            பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஓசூரில் 1100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

              சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 450 கோடியில் சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் கூறினார்.  சென்னையில் அறிவியல் பெருநகரம் அமைக்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக மூலக்கடை-திருமங்கலம், மூலக்கடை-திருவான்மியூர், லஸ்-ஐய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.  

 ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்: 

  *  கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள். 

*  நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் திட்டம்.  அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ரத்து.   

*  பஞ்சமி நில மீட்பு குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க முடிவு.   

*  நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுத்திட சிறப்புத் திட்டம்.  

*  பச்சிளம் குழந்தைகளுக்காக ரூ.10 கோடியில் தீவிர அவசர சிகிச்சைத் திட்டம்  

*  கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம். 

  *  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஒசூரில் 1,100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டம்.  

*  சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நிலத்தடி நீரைச் செறிவூட்ட சிறப்புத் திட்டம்.  

*  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த முடிவு.   

*  சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ.450 கோடியில் சிறப்புத் திட்டம்.  

*  கள்ளக்குறிச்சி, நெம்மேலி, நாகலாபுரம், அரூர், திருச்சுழி ஆகிய இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள். 

  *  நாகை மாவட்டம் கீழ்வேளூரில் விவசாயக் கல்லூரி. 

  *  சென்னையில், மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - ஐயப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை புதிய பாதைகளில் மெட்ரோ ரயில் விடுவது குறித்து திட்ட ஆய்வு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior