உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 11, 2011

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலை விபத்து: இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரண தொகை வழங்க கோரிக்கை

கடலூர்:

              கடலூர் சிப்காட் தனியார் ரசாயனத் தொழிற்சாலை விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொதுமக்கள் பாதிப்பு இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை விடுத்தார்.  

              கடலூர் சிப்காட் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் 7-ம் தேதி இரவு ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால், அப்பகுதி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து, நிஜாமுதீன்  கூறியது:  

              தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்து மிகவும் மோசமானது. சம்பவம் நடந்து 3-வது நாளில்கூட, மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நீண்டகால சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். பலரது அன்றாட வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. பலர் தொடர்ந்து வேலை செய்வதிலும் உடல் ரீதியான சிரமம் ஏற்பட்டு உள்ளது. வீட்டில் ஆடு, கோழி உள்ளிட்ட உடமைகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.  

              இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரமாகவும், இடைக்காலமாகவும் பொதுமக்கள் பாதிப்பு இன்சூரன்ஸ் சட்டப்படி நிவாரணம் கோரிப் பெற முடியும். நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.  சம்பவம் நடந்த அன்று மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தும், பாதிக்கப்பட்ட தொழிற்சாலைக்குள் செல்ல, மாஜிஸ்திரேட் அதிகாரம் பெற்ற, ஆட்சியரை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று அறிகிறோம். அவ்வாறு அனுமதிக்கப்படவில்லை என்றால் அது சட்டப்படி குற்றமாகும்.  

                 விபத்து நிகழ்ந்த தனியார் ரசாயனத் தொழிற்சாலை உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகள் பலவும், அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே இயங்கிக் கொண்டு இருக்கின்றன. ரசாயனத் தொழிற்சாலை விபத்து போன்று, அவற்றிலும் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் பல, பயன்படுத்தப்படுகின்றன.  எனவே ரசாயன தொழிற்சாலை விபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதுபோல், ஏனைய தொழிற்சாலைகளின் நிலை குறித்தும் விசாரணை நடத்த, அரசு உத்தரவிட வேண்டும்.  

                 சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் நிலம், நீர், காற்று மாசு குறித்து, தற்போது ஆய்வை மேற்கொண்டு இருக்கும், தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் (நீரி), தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்தையும் பதிவு செய்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  ஏற்கெனவே 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீரி ஆய்வறிக்கையில், சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள 22 கிராமங்களில், மக்களின் சுகாதார நிலை குறித்து, பொதுவான ஆய்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டும், இதுவரை அந்த ஆய்வை நடத்த தமிழக அரசு, முயற்சிகூட மேற்கொள்ளவில்லை. தனியார் ரசாயனத் தொழிற்சாலை விபத்து நிகழ்ந்துள்ள இந்த நேரத்திலாவது, சுகாதார ஆய்வைத் தொடங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றார் நிஜாமுதீன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior