உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 17, 2011

தோட்டக்கலை துறையின் வளர்ச்சித் திட்டங்கள்

         தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
           ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் துல்லிய பண்ணைத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய மூங்கில் இயக்கம், தேசிய மூலிகை பயிர்கள் இயக்கம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்: 

           இத் திட்டத்தின்கீழ் காய்கறி விதைகளில் கத்திரி, வெண்டை, செடிமுருங்கை, மிளகாய் விதைகளும், பழமரக் கன்றுகளான மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, பெருநெல்லி, புளியன் கன்றுகளும் 50 சதவீத மானிய விலையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

நுண்ணீர் பாசன திட்டம்: 

          இத் திட்டத்தின்கீழ் பழமரங்கள், காய்கறி பயிர்களுக்கு 65 சதவீத மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்பாசனம் செய்வதால் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் தண்ணீரை கொண்டு 2.50 ஏக்கர் வரை நீர்பாசனம் சிக்கனமாக செய்ய முடியும். 

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், துல்லிய பண்ணை திட்டம்: 

           துல்லிய பண்ணை திட்டத்தின்கீழ் விவசாயிகள் ஒரு வருவாய் கிராமத்திலோ அல்லது அருகாமையில் உள்ள ஒன்று முதல் மூன்று வரையிலான வருவாய் கிராமங்களிலிருந்தோ 20 ஹெக்டேர் பரப்பளவுக்கு விவசாயிகளை ஒன்று சேர்த்து அதை கூட்டுறவு சங்க விதிகளின்படி பதிவு செய்து இத் திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். 

            மேலும் இந்த திட்டத்தின்கீழ் ஓராண்டு வரை வயதுள்ள தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 65 சதவீத மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் வழங்கி, வயல்களில் பொருத்தும் பணியும் செய்து தரப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான உரங்களும் சங்கம் மூலம் தெரிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

             தேசிய தோட்டக்கலை இயக்கம்: இந்த திட்டத்தின்கீழ் தோட்டக்கலை பயிர்களான மா, வாழை, திசுவாழை, கொய்யா, சம்பங்கி, கனகாம்பரம், மல்லி, முந்திரி, கோகோ, மிளகாய் போன்ற பயிர்களுக்கான விதையின் இடுபொருள்கள் பெரிய விவசாயிக்கு 33 சதவீத மானியத்திலும், சிறு, குறு விவசாயிக்கு 50 சதவீத மானியத்திலும் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 4 ஹெக்டேர் வரையிலும் மானியமாக அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

               மேலும் மா, முந்திரி பயிர்களை அடர்நடவு முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தரமான வீரிய ஒட்டுரக மா, முந்திரி கன்றுகள் பெரிய விவசாயிக்கு 33 சதவீத மானியத்திலும், சிறிய விவசாயிக்கு 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரப்பளவில் அரசு விதிமுறைகளின்படி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திடவும் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. 

             எனவே தோட்டக்கலைப் பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior