கடலூர்:
          கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும், சுற்றுச்சூழலை  மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.   
அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு. திருமாறன் அண்மையில் மாவட்ட  ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:
               கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுக்களைக்  கட்டுப்படுத்த மாசுக் கட்டுப்பாடு வாரியம் தவறிவிட்டது. சிப்காட் பகுதியைச்  சுற்றியுள்ள மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுச் சூழலை  மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் கொண்ட  கண்கணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும். சிப்காட் தொழிற்சாலை முதலாளிகளின்  தொழிலாளர் விரோதப் போக்கை கட்டுப்படுத்த   வேண்டும்.   
              போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், கடலூர் அரசு மருத்துவமனை முன்  பொதுமக்கள் வசதிக்காக சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.   கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த,  நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நடவடிக்கை மிகவும் பின்தங்கிய  நிலையில் உள்ளது. இதைச் சரிசெய்து இலவச மனைப் பட்டாக்களை வழங்க துரித நடவடிக்கை  எடுக்க வேண்டும்.   பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை, முழுமையாக நிறைவு செய்ய  வேண்டும். 
             ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை முறையாக வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.   கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தையும், பாதாளச் சாக்கடைத்  திட்டத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.   தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலாளர் திருமார்பன், மாநில  நிதிச்செயலாளர் அன்பரசன் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர்


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக