உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிப்பு

மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டதால் வியாழக்கிழமை வெறிச்சோடிக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்குதளம்.
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கடந்த 3 தினங்களாக முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. 

               72 கி.மீ. நீளம் கொண்ட கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலை நம்பி சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகப்பெரிய விசைப் படகுகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, மீன்பிடித் தொழில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.  ஜூலை மாதம் முழுவதும் 10 முதல் 30 சதவீத படகுகள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டன. கடந்த 3 நாள்களாக யாரும்  மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாள்களாக வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. 

                  கடல் அரிப்பும் மோசமாக உள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கிப் போயிற்று.  மீன்பிடித் தொழிலை நம்பி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட ஐஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் மூடிக் கிடிக்கின்றன. மீன்களை வாங்கி வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சமார் 100 உள்ளன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும், அவற்றில் பணிபுரிவோரும் பெரிதும் கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.  வங்கக் கடலில் நீரோட்டம் தொடர்ந்து மாறியிருப்பதால் மீன்கள் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் வியாழக்கிழமை தெரிவித்தார். 

                 மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாடச் செலவுக்கே, படகு உரிமையாளர்கள் விருப்பப்பட்டு வழங்கும் சிறிய தொகையைக் கொண்டே ஜீவனம் நடத்துகிறார்கள்.  மிகப்பெரிய விசைப் படகுகளை வைத்து இருப்போர் பலர் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்கிறார்கள். அவர்கள் பெரிதும் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றார்.  


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior