உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

பரங்கிப்பேட்டை பகுதியில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு மானியம்

சிதம்பரம்:
 
             குறைந்த செலவில் கூடுதல் மகசூல் தரும் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் தெரிவித்துள்ளார்.​ ​
 
இதுகுறித்து ரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:​ ​
 
                      சிதம்பரம், ​​ பரங்கிப்பேட்டை பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.​ 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை நெல் மட்டும் போதுமானதாகும்.​ ஒரு ஏக்கருக்கு 1 சென்ட் என்ற அளவில் பாய் நாற்றங்கால் விதைப்பு செய்ய வேண்டும்.​ ​நடவுக்கு 13 முதல் 15 நாள் வயதுடைய இளம் நாற்றுக்களை குத்துக்கு ஒன்று வீதம் 22.5 செ.மீட்டருக்கு 22.5 செ.மீட்டர் என்ற அளவில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.​ 
 
                இதற்கு மார்க்கர் கருவியை பயன்படுத்தலாம்.​ நடவு வயலில் களை எடுக்க கோனோவீடர் எனும் களைக்கருவியை நட்ட 10-ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 4 முறை பயன்படுத்த வேண்டும்.​ இக்கருவியை பயன்படுத்துவதால் களைகள் கீழே தள்ளப்பட்டு மக்கி உரமாக பயிருக்கு கிடைப்பதுடன்,​​ நல்ல காற்றோட்டமும் பயிருக்கு கிடைக்கும்.​ ​இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையானபோது தழைச்சத்தினை பயிருக்கு இட வேண்டும்.​ செம்மை நெல் சாகுபடியில் சாதாரண முறையை விட,​​ 25 சதவீத மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.​ ​
 
                    ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் 5 கிராமங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத் தளைகள் அமைக்கப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு கிராமத்திலும் 25 ஏக்கர் பரப்பில் தொகுப்பாக இந்த செயல் விளக்கத்தளைகள் அமைக்கப்படவுள்ளன.​ அச்செயல் விளக்கத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.​ ​எனவே,​​ தங்களது நிலங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத்தளைகளை அமைக்க விரும்பும் விவசாயிகள்,​​ தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தனசேகர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior