உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 25, 2010

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஜனவரி 10-க்குள் கிடைக்க ஏற்பாடு: தலைமைத் தேர்தல் அதிகாரி

             ஜனவரி 10-ம் தேதிக்குள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            2011 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு (அதாவது இந்த காலகட்டத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தன.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

            மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தனித்தனியே நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஜூலையிலும் நடைபெற்றன. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  பொது மக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு அறியலாம்.  

             தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும்  www.elections.tn.gov.in​ தகவலை அறிந்து கொள்ளலாம். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையை அளித்து ஒப்புதலைப் பெறுவர்.  ஜனவரி 10-ம் தேதிக்குள் யாருக்கேனும் வாக்காளர் புகைப்பட அடையாள கிடைக்காவிட்டால் வாக்குச் சாவடி நிலை அலுவலரையோ, அந்தப் பகுதியின் வட்டாட்சியரையோ அல்லது மண்டல அலுவலரையோ தொடர்பு கொண்டு அவரது அடையாள அட்டையின் நிலைமையை அறிந்து கொள்ளலாம் என்று பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior