உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

உயிரித் தொழில்நுட்பத்தில்தான் எதிர்கால விவசாயம்

             உயிரித் தொழில்நுட்பத்தில்தான் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி  தெரிவித்தார்.

பருத்தி சாகுபடிக்கு உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தின் (போல்கார்டு - 2 ரவுண்ட்அப் ரெடி ஃபிளக்ஸ்) அறிமுக நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி   பேசியது: 

                  நாடு சுதந்திரம் அடைந்தபோது உணவு பற்றாக்குறை அதிகளவில் இருந்தது. உணவு தானியங்களுக்காக பிற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தோம். இப்போது தேவையான அளவுக்கு உணவுத் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், வருங்காலத் தேவையைக் கணக்கிடும்போது உற்பத்தியை மேலும் பெருக்க வேண்டியது அவசியம். 2002-ல் பிடி பருத்தி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது பருத்தி உற்பத்தி அதிகரித்து வருகிறது. 

                மொத்த சாகுபடி பரப்பில் 90 சதம் பிடி பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, வேளாண்மை நிகழ்ந்த பெரும் புரட்சியாக பிடி பருத்தியைக் கூறுகின்றனர். பருத்தி சாகுபடிக்கான செலவில் 20 சதம் பூச்சி கட்டுப்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. அதோடு, களை கட்டுப்பாடு பெரும் சவாலாக உள்ளது. களைகளால் 42 சதம் சாகுபடி இழப்பு ஏற்படுகிறது. மரபணு மாற்று ரகங்களில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுவதில்லை. சாகுபடிக்கான செலவு குறைவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கிறது. 

                    பிடி பருத்தி சாகுபடி காரணமாக பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு கணிசமாக குறைகிறது. பிடி கத்தரி குறித்து மக்களிடம் எதிர்மறையான கருத்து நிலவுகிறது. மரபணு மாற்று ரகங்களால் மனிதர்கள், விலங்குகள், சூழலுக்கு பாதிப்பு கிடையாது. சாதாரண கத்தரியில், அறுவடைக்கு முன்பு வரை பூச்சி மருந்துகள் அடிக்கப்படுகிறது. பிடி கத்தரிக்கு அதற்கான அவசியம் இல்லை என்றார். மான்சாண்டோ நிறுவன அறிவியல் வெளிவிவகாரத் துறை தலைவர் சாந்தனு தேஷ்குப்தா, மஹிகோ விதை நிறுவன அதிகாரி சந்திரசேகர் சபோர்கர், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், வேளாண் பல்கலை. பதிவாளர் பி.சுப்பையன், உழவியல் துறைத் தலைவர் பி.முத்துகிருஷ்ணன், ஆராய்ச்சி இயக்குநர் எம்.பரமாத்மா உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior