உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 15, 2011

கடலூர் மாவட்டத் தொகுதிகள்: சிதம்பரம், புவனகிரி - ஓர் அலசல்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தொகுதி பங்கீடுகள் பின்வருமாறு இருக்கலாம்.

             கடலூர், விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், புவனகிரி, நெய்வேலி ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், திட்டக்குடி, காட்டுமன்னார்குடி ஆகிய தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் தி.மு.கழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

             மேலும் குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம், நெய்வேலியில் பா.ம.க.வின்  வேல்முருகன், காட்டுமன்னார்குடியில் நடப்பு உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடலாம் என்றும் தெரியவருகிறது சிதம்பரம் தொகுதியைப் பொறுத்தவரை, மறு சீரமைப்பில் புவனகிரி தொகுதியிலிருந்து சில ஊர்களை அது கூடுதலாகப் பெற்றுள்ளது.

             தி.மு.க அணியில் சிதம்பரம் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதை பொறுத்த வரையில் மாவட்ட அரசியலே பிரதான காரணியாக இருக்கிறது. எது எப்படியோ சிதம்பரம் தொகுதி பற்றி," நம் கட்சி போட்டியிடுமா? நம்மவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?" போன்ற மணிக்கொருதரம் மெருகேற்றப்படும் கலவையான கருத்துக்களுடன் விவாதங்கள் ஆங்காங்கே பலமாக நடைபெற்று வருகிறது

                 அ.தி.மு.க சார்பில் அருண்மொழிதேவன் M.L.A, முன்னாள் அமைச்சர் கலைமணி, தோப்பு சுந்தர், V.K.மாரிமுத்து, உள்ளிட்டோரும், தே.மு.தி.க சார்பில் சபா.சசிகுமார், ஷபியுல்லாஹ், காங்கிரஸ் சார்பில் பரங்கிப்பேட்டை R.குமாரமுருகன், சத்தியமூர்த்தி, P.P.K.சித்தார்த்தன், வழக்கறிஞர் வேல்முருகன், ராதாப்பிள்ளை உள்ளிட்டோர்களும், சிதம்பரம் அல்லது புவனகிரி தொகுதிக்காக முயற்சி செய்து வருகின்றனர். புவனகிரி தொகுதிக்காக நடப்பு எம் எல் ஏ வான  பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த செல்வி இராமஜெயம் M.L.A. விண்ணப்பித்துள்ளார்.

                பா.ம.க சார்பில் தேவதாஸ் படையாண்டவர், V.M.S.சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்கிறார்.இதில் சிலர் மிகத் தீவிரமாக தங்கள் கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்களின் தொடர்பின் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்

                 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், கடந்த வெள்ளியன்று காலை நடைப்பெற்ற நேர்காணலில் பரங்கிப்பேட்டையிலிருந்து விருப்ப மனு தாக்கல் செய்திருந்த பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், A.R.முனவர் ஹுசேன், M.K.பைசல் யூசுப் அலி, கைருன்னிசா, புருஷோத்தமன், ஒன்றிய சேர்மன்கள் முத்து.பெருமாள், செந்தில் குமார், மாமல்லன், முன்னாள் M.L.A. சரவணன், தச்சக்காடு ராமதாஸ், டாக்டர் அமுதா பெருமாள், திருமாறன், கோவிந்தராஜ், ஷாஆலம், பேராசிரியர் சபாபதி மோகன், உட்பட 31 நபர்கள் சிதம்பரம் தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தனர், இவர்கள் அனைவர்களையும் ஒரே நேரத்தில் அழைத்து, உங்கள் அனைவர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி, காலமின்மையால் தனித்தனியே சந்திக்க முடியவில்லை, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுங்கள், தலைவர் முடிவினை அறிவிப்பார் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பேராசிரியர் சபாபதி மோகன் புவனகிரி தொகுதிக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார்.

          முன்னதாக புவனகிரி தொகுதிக்காக நடைப்பெற்ற கூட்டு நேர்காணலில், "புவனகிரி தொகுதியில் தி.மு.க எப்போது வெற்றி பெற்றது? உள்ளிட்ட சில கேள்விகள் நேர்காணலில் பங்கேற்றோரிடம் கேட்கப்பட்டது, மேலும் பங்கேற்றோர் அனைவர்களும் ஒரே குரலில் தி.மு.கழகம் புவனகிரியில் போட்டியிட வேண்டும் என்று நேரடி வேண்டுகோளும் கட்சித் தலைமையிடம் விடுத்துள்ளனர். ஆனால் புவனகிரி தொகுதியினை காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், பா.ம.க மறுப்பதாகவும் நேற்றிரவு கிடைத்த தகவல் உறுதிப்படுத்துகிறது

            தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு சிதம்பரம் தொகுதியை முஸ்லிம் லீக் கேட்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. வெற்றி தோல்வியைப் பொறுத்தவரை, திமுகவுக்கு சற்றே ஆதரவு அதிகமிருந்தும் கடந்த முறை புவனகிரியில்  அதிமுக வென்றதற்கு வேட்பாளரின் நற்பெயரும் பெருங்  காரணமாக அமைந்தது எனலாம்.  சென்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு "இலுப்பைப்பூ'வாக  இத்தொகுதி அமைந்தது.

                திமுக-காங்கிரஸ் இடையேயான பங்கீடு முடிவுக்கு வரும் பட்சத்தில் தான், வெற்றி தோல்வி குறித்து விரிவாக சொல்ல இயலும். ஏனெனில், இத்தொகுதிகள் வேட்பாளர் தேர்வுகளும் முடிவை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior