உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

தமிழ்நாட்டில் மாதம் 20 கிலோ இலவச அரிசி : ஜூன் 1 முதல் எல்லா நாட்களிலும் பெறலாம்

           
 
             தமிழ்நாட்டில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் இலவச அரிசி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
 

               வருகிற 1-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ் நாட்டில் அமலுக்கு வருகிறது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.   கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது:-

            முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற உடனே அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என ஆணையிட்டார். இலவச அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் 1-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு தக்க ஏற்பாடுகளுடன் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும், எடை குறைவின்றி வழங்கிட அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

               தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து நியாய விலைக்கடைகளும் நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகின்றனவா? என அலுவலர்கள் காலையிலேயே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையின் பெயர் பலகையில் இருப்பு விவரப்பட்டியலை நாள்தோறும் பொதுமக்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்கின்றனரா? என கண் காணிக்க வேண்டும்.

             நியாய விலைக்கடை பணியாளர்களும் தவறுகளுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் அமுதவல்லி, அசோகன், பன்னீர்செல்வன், தமிழரசன், ராஜேந்திரன், சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இதே போல் உணவுத்துறை அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி  கூறியது:-


               நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்கள் முன் நகர்வுக்கு ஏற்ற வகையில், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, அத்தியா வசியப் பொருட்களின் இருப்பு தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இருப்பு இல்லா நிலை தவிர்க்கப்பட வேண்டும். இந்திய உணவுக் கழகத் திடமிருந்து அரிசி மற்றும் கோதுமை நகர்பு செய்யும் போது அதன் தரத்தை உறுதி செய்த பின்பே நகர்வு செய்ய வேண்டும். தரம் அனைத்து நிலைகளிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

          இந்திய உணவுக் கழகத் திலிருந்து நகர்வு செய்யப்படும்போது அது முழுமையாக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு வந்து சேர்வது கண்காணிக்கப்பட வேண்டும். கிடங்குகளில் சமச்சீர் செய்யும்போது எடைக் குறைவு ஏற்படக்கூடாது. மறுநாள் தேவையை எதிர் நோக்கி போதுமான மூட்டைகள் சமச்சீர் செய்து இருப்பு வைத்த பின்பே கிடங்கை மூட வேண்டும்.   நியாய விலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் வரப்பெற்றால் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து அதனை மாற்ற வேண்டும். அங்காடிகளில் இருப்பு வைத்திருந்தபோது தரக்குறைவு ஏற்பட்டிருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடக் கூடாது.

                 நியாய விலைக்கடை களின் எடைக்குறைவு ஏது மின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் அனைத்து நாட்களி லும் அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யும் வகையில் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். இது பகுதி அலுவலர்களால் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும். சரியான நேரத்தில் அங்காடி களைத் திறந்து பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

            காலாவதியான பொருட்களை குடும்ப அட்டைதா ர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழங்குதல் கூடாது. இலவச அரிசி வழங்குவதை முறையாக விளம்பரம் செய்து 1-ந் தேதி முதல் செயல்படுத்துதல் வேண்டும். அதற்குத் தேவையான அரிசியை கிடங்குகளிலிருந்து அங்காடிக்கு முன் நுகர்வு செய்து வைத்தல் வேண்டும். வெளி ஆட்கள் அங்காடிகளில் இருப்பதை தடுத்திட ஏதுவாக பெயர் வில்லைகளை அணிந்து பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                 கூட்டத்தில் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஜெயக்கொடி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வீரசண்முகமணி, உணவுத் துறை உயர் அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், இணைப்பதிவாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior