உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைப்பு

             சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பழைய பாடப் புத்தகங்களே பயன்படுத்தப்பட உள்ளன.  பாடப் புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

           அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 9.50 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.  கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதென்று அப்போது முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:  இப்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது.  

ஆராய வல்லுநர் குழு: 

                சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எனவே, இந்தக் கல்வியாண்டில் பழைய பாட புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. முன்னதாக, அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், "ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும்" என்று கூறியிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் அதற்கான பணிகளில் அந்த அரசு ஈடுபட்டது.  

               சமச்சீர் கல்வித் திட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆராய, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை 2007-ம் ஆண்டு அரசுக்கு அளித்தது.  சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு சில தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தத் திட்டத்தை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  ஆனாலும், இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது. இதையடுத்து, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டது.  இந்த நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளதால், பழைய புத்தகங்களை மாணவர்கள் தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது

பழைய பாடத் திட்டத்தின் கீழ் 6 கோடி புத்தகங்கள் புதிதாக அச்சடிப்பு


              சமச்சீர் கல்விக்குப் பதிலாக இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்பட உள்ளதையடுத்து, புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன.  பத்தாம் வகுப்பு வரை 2011-12-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்திருந்தது. இதற்காக தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் 7.68 கோடி புத்தகங்களை அச்சிடும் பணிகளை மேற்கொண்டு வந்தது.  சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இதுவரை 6.5 கோடி புத்தகங்கள் ரூ.216 கோடி செலவில் அச்சிடப்பட்டுள்ளன. 

              இந்த நிலையில் இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றும் அரசின் முடிவையடுத்து, சமச்சீர் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சமச்சீர் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன. அந்தப் பணிகளே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், ஜூன் 15-ம் தேதிக்குள் புத்தகங்களை முழுவதுமாக அச்சிட்டு வழங்குவது சாத்தியமில்லாதது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

             முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்துப் பாடல் உள்ளிட்ட படைப்புகள் சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவதை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.  அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்களை அச்சிடுவது தொடர்பாக பதிப்பாளர்களிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:  

              பழைய பாடத்திட்டத்தின் கீழ் 6.4 கோடி புத்தகங்களைப் புதிதாக அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை அளித்து புத்தகங்கள் பதிப்பிக்கப்படும்.  புத்தகங்களை அச்சிடும் பணிகள் முழுவதுமாக முடிய 2 அல்லது 3 மாதங்கள் வரை ஆகலாம். இந்தப் பணிகளுக்காக மொத்தம் 14 ஆயிரம் டன் அச்சுக் காகிதம் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களை அச்சிட ரூ.110 கோடி வரை செலவாகலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.  இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்காக புதிதாக டெண்டர் கோரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமச்சீர் கல்வி புத்தகங்கள் பெரியதாகவும், பல வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டதால், அதிக செலவு ஆனது. ஆனால், பழையப் பாடத்திட்டத்தின் படி சிறிய புத்தகங்கள், குறைந்த அளவிலான வண்ணங்களில் தயாரிக்கப்படுவதால் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 பழையப் புத்தகங்கள்: 

               தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் இப்போது 40 ஆயிரம் பழையப் பாடப் புத்தகங்கள் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதோடு, அந்தந்தப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள், பழைய மாணவர்களிடமும் புத்தகங்கள் இருக்கும். இணையதளத்திலும் இந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, இவற்றை வைத்து ஜூன் 15 முதல் பள்ளிகளில் பாடங்களை நடத்த முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.  அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழையப் புத்தகக் கடைகளையும், முன்னாள் மாணவர்களையும் பள்ளி மாணவர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  

இடம் இல்லை:  

               தமிழகம் முழுவதும் 65 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் ஒரு மையத்தை அமைத்து சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன.  இப்போது புதிதாக அச்சடிக்கப்பட உள்ள 6.4 கோடி புத்தகங்களை இந்த மையங்களில் வைத்து விநியோகிக்க இடம் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 கிடங்குகளிலும் சமச்சீர் புத்தகங்கள் நிறைந்துள்ளன.  எனவே, புதிதாக அச்சடிக்கும் புத்தகங்களை எப்படி எடுத்துச் சென்று விநியோகிப்பது, ஏற்கெனவே அச்சடித்துள்ள புத்தகங்களை என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.  பதிப்பாளர்கள் மூலம் புத்தகங்களை நேரடியாகப் பள்ளிகளுக்கே எடுத்துச் சென்று விநியோகிக்கும் யோசனையும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior