உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

கலைஞரின் பச்சிளங்குழந்தை உயிர் காக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் ; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சிதம்பரம்:

                கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழக அரசின் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கும் விழா முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி , காட்டுமன்னார்கோவில் லலிதா மகால் ஆகிய இடங்களில் நடந்தது.

               விழாவுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) வெங்கடாசலம் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராமராஜூ, ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணை தலைவர் சின்னப்பா, பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 36 ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கினார்.  மேலும் காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி, மேல கடம்பூர் ஊராட்சியை சேர்ந்த 539 பேருக்கு இலவச கியாஸ் அடுப்புகள் வழங்கி பேசினார். 
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது:-

                 தமிழகத்தில் 29 லட்சம் குடிசைகள் உள்ளது.முதல்- அமைச்சர் இந்த வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.அதன்படி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார்.இந்த வீடு வழங்கும் திட்டத்திற்கு முதலில் ரூ.60 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் கூடுதலாக நிதி வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. , கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற முதல்- அமைச்சர் ரூ.75 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தார்.

               கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 26 ஆயிரத்து 119 வீடுகள் கட்டுவதற்கு பணி நடந்து வருகிறது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா வல்லம்படுகையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதேபோல் தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதியும், அந்த திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை பயனாளியிடம் ஒப்படைத்தார்.

                   இதனால் நமது மாவட்டத்திற்கு பெருமை உண்டு.கலைஞர் ஆட்சியில் பசி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு குடிசை வீடுகள் என்றால் என்ன என்றே தெரியாத நிலை உருவாகும். விரைவில் கலைஞரின் பச்சிளங்குழந்தை உயிர் காக்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். வருகிற 5 மாதங்களில் தேர்தல் வருகிறது.ஆகவே கலைஞர் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior