உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

ரூ.1,247 கோடி நிகர லாபம்; என்.எல்.சி. சாதனை


          
            கடந்த நிதி ஆண்டில் ரூ. 1,247 கோடி நிகர லாபம் ஈட்டி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) சாதனை படைத்துள்ளது என்று அந் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்தார். 
 
இதுகுறித்து என்.எல்.சி நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர். அன்சாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
 
                 என்.எல்.சி. நிறுவனம் பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 54 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2490 மெகாவாட். இதில் 1,153 மெகாவாட் அளவு மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் விநியோகிக்கப்படுகிறது. 
 
மின்னுற்பத்தியில் சாதனை: 
 
                      கடந்த நிதி ஆண்டில் (2009-10) மட்டும் ரூ. 4,121 கோடி அளவுக்கு வணிகம் செய்துள்ளது. நிகர லாபமாக ரூ. 1,247 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 51.9 சதவீதம் கூடுதலாகும். சிறப்பான திட்டமிடுதல் மூலம் அதிகபட்ச உற்பத்தித் திறனை தொழிலகங்களில் பெற்றதன் மூலம் அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது.என்.எல்.சி. தனது 4 சுரங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு 223 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இதே போல அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 1,765 யூனிட் மின்னுற்பத்தி செய்கிறது. இது நிறுவனத்தின் வரலாற்றில் அதிகபட்ச உற்பத்தி அளவாகும். கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 10 சதவீதம் அறிவிக்கப்பட்டு,ரூ. 167.77 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி ஈவுத் தொகையாக 10 சதவீதம் வழங்க என்.எல்.சி. இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பங்கு ஈவுத் தொகைக்காக ரூ. 335.54 கோடி செலவிடப்படும். 
 
கட்டுமான திட்டங்கள்:
 
                  நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்தில்  250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றொரு 250 மெகாவாட் மின் உற்பத்திப் பிரிவு வரும் ஜூன் மாதத்தில் செயல்படத் தொடங்கும். ராஜஸ்தானில் உள்ள பர்சிங்சர் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 7-ம் தேதி இது தொடங்கி வைக்கப்படும். மற்றொரு மின்னுற்பத்திப் பிரிவு ஜூலை மாதத்தில் தொடங்கப்படும்.  
 
காற்றாலை மின்னுற்பத்தி: 
 
                   தமிழகத்தில் செங்கோட்டை, கம்பம் ஆகிய இடங்களில் காற்றாலைகளை நிறுவி 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. நெய்வேலி நகரியத்தில் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்து உள்ளூர் தேவைக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தி எப்போது? 
 
                        தமிழக மின் வாரியமும், என்.எல்.சி.யும் இணைந்து கூட்டு முயற்சியாக என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தை அமைத்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடியில் ரூ. 5 ஆயிரம் கோடி (ஆயிரம் மெகாவாட் திறனுள்ள) புதிய அனல் மின் நிலையத்தை அமைக்கும் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த மின் நிலையத்தில் மின் உற்பத்தியின்போது கொதிகலன்களுக்கு எரிபொருளாக பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவு வரும் 2012-13-ல் மின் உற்பத்தியைத் தொடங்கும். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின் என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 4290 மெகாவாட் அளவுக்கு உயரும். 
 
ஜெயங்கொண்டம் மின் திட்டம்: 
 
               தமிழகத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டுக்கு 135 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கவும், 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
 புதிய திட்டங்கள்:  
 
                    அதிநவீன மின்னுற்பத்தி திட்டத்தின் கீழ் சென்னை அருகே செய்யூரில் (4,000 மெகாவாட்) ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய மின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுதல், உற்பத்தி, நிர்வகித்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதுதவிர ரூ. 2 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் மற்றொரு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதற்கு 2,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசிடமும் கோரப்பட்டுள்ளது.  நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு போதிய ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை என்.எல்.சி. மிகவும் கவனத்துடன் பின்பற்றுகிறது என்றார் அன்சாரி. என்.எல்.சி. இயக்குநர்கள் கே. சேகர் (நிதி),ஆர். கந்தசாமி (திட்டங்கள்) உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior