உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'

கடலூர்: 

             குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை தன் மனைவி இல்லை என, கோர்ட்டில் மறுத்த அரசு ஊழியருக்கு செருப்படி விழுந்தது. 

             இச்சம்பவம் கடலூர் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் டி.குமராபுரத்தைச் சேர்ந்தவர் அருள் (50). வரக்கால்பட்டு மின் அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முதல் திருமணத்தை மறைத்து விழுப்புரம் மாவட்டம் அந்தராசிபாளையம் விஜயலட்சுமி (35) என்பவரை மயிலம் கோவிலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

               இவருக்கும் 9 வயதிலும், 5 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அருள் அலுவலகம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், முதல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சேர வேண்டும் என வாரிசு உரிமையை எழுதி வைத்துள்ளார். இதனையறிந்த விஜயலட்சுமி, அருளைத் திருமணம் செய்து  இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என ஆதாரங்களுடன், கடலூர் கலெக்டர் சீத்தாராமனிடம் புகார் கொடுத்தார்.  இது குறித்து, கடலூர் மாவட்ட முதன்மை தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். 

               இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. விஜயலட்சுமி தனது மனைவி இல்லை என விசாரணையின் போது அருள் கூறினார்.  பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அருள், வீட்டிற்குச் செல்ல கலெக்டர் அலுவலகம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெளியே நின்றிருந்த விஜயலட்சுமி, அருளிடம் சென்று, "கோவிலில் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு "நா கூசாமல்' கோர்ட்டில் என் மனைவி இல்லை என கூறுகிறாயே' எனக்கேட்டு செருப்பால் அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கினார். 

                    அவமானமடைந்த அருள், விஜயலட்சுமியை உதறித் தள்ளி விட்டு மீண்டும் கோர்ட்டுக்குள் ஓடினார்.  மண்ணை வாரி விட்டு அழுத விஜயலட்சுமியை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior