உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

பண்ருட்டியில் விதை மணிலா உற்பத்தி மும்முரம்

பண்ருட்டி, நவ.29:

மணிலா விதைப்பு பருவம் தொடங்கியுள்ளதால், பண்ருட்டி பகுதியில் உள்ள மணிலா உடைப்பு ஆலைகளில் விதை மணிலா உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாய விளைப் பொருள்களில் நெல், கரும்புக்கு அடுத்தப்படியாக எண்ணெய் வித்துக்களில் மணிலா அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது.

கார்த்திகை, மார்கழி மாதத்தில் மணிலா விதைப்பு செய்யப்படும். இருப்பினும் மழையால் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தால் அனேக விவசாயிகள் கார்த்திகை தீபம் முடிவடைந்ததும் மணிலா விதைப்பை தீவிரப்படுத்துவர். பண்ருட்டி வட்டத்தில் பண்ருட்டி, மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மணிலா உடைப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவர்கள் திருவண்ணாமலை, ஆந்திரம், குஜராத், கர்நாடகம் போன்ற பகுதிகளில் இருந்து மணிலாவை இறக்குமதி செய்கின்றனர். பெரும்பாலும் ஆந்திரம், குஜராத் ஆகிய பகுதிகளில் மணிலா குறைந்த விலையில் கிடைப்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்யும் மணிலாவை இயந்திரத்தின் மூலம் உடைந்து பயிர்களை தனியாக பிரித்து எடுக்கின்றனர்.

இது குறித்து மணிலா வியாபாரி ஒருவர் கூறியது: மணிலாவை இயந்திரத்தின் மூலம் உடைத்து பயிர்களை தனியாக எடுப்போம். இதில் விதை, உணவு, எண்ணெய்க்காக என தரம் பிரித்து எடுத்து விடுவோம். விதை மணிலாவை விவசாயிகள் நேரிடையாக ஆலைக்கே வந்து வாங்கி செல்வர், மேலும் வெளியூரில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்போம். இரண்டாம் நிலையில் உள்ள மணிலாவை கேக் கம்பெனி, பட்டாணிக் கடைகளுக்கு விற்பனை செய்வோம். மூன்றாம் நிலையில் உள்ள மணிலா எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தப்படும். தற்போது விதை மணிலா விற்பனை மந்தமாக உள்ளது. கார்த்திகை தீபம் முடிந்தவுடன் தான் சந்தை நிலவரத்தை கூறமுடியும். தினந்தோறும் சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் வேலை ஆட்களும் வேலை செய்யாத நிலையில் முழு கூலியும் கொடுக்க வேண்டியுள்ளது என வேதனையுடன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior