உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

ஏப்ரல் மாதம் அமலாகும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பு

நெய்வேலி:
 
                        என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் எப்போது ஏற்படும், அதன்பின் புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் எந்த மாதத்திலிருந்து ஊதியம் பெறலாம், எவ்வளவு நிலுவைத் தொகை கிடைக்கும் என என்எல்சி தொழிலாளர்கள் கடந்த 2 மாதமாக விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர், 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுதவிர 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் மினிரத்னா என்ற அந்தஸ்துடன் இயங்கி வருகிறது. 
 
 
                       இந்நிலையில்  நிறுவனப் பொறியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய மாற்று ஒப்பந்தம் கடந்த 6 மாதத்துக்கு முன் ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், நிரந்தரத் தொழிலாளர்களுக்கான கடந்த கால ஊதிய மாற்றும் ஒப்பந்தம் 31-12-2006-ம் ஆண்டோடு முடிவடைந்ததை அடுத்து, 01-01-2007 முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொழிற்சங்கங்கள் போதிய கவனம் செலுத்தாததால் புதிய ஒப்பந்தம் காலதாமதமானது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க செயல்பாடு குறித்து அதிருப்தி நிலவியதால், தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களின் அதிருப்தியை போக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை இடைக்கால நிவாரணத் தொகையை பெற்றுக் கொடுத்தனர்.
 
                     இந்நிலையில் அதிகாரிகளுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்பட்டதால், தொழிலாளர்கள் விரக்தியோடு தினந்தோறும் தொமுச அலுவலகத்தை நோக்கி படையெடுத்தவண்ணம் இருந்தனர். இதையடுத்து என்எல்சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளித் தொழிற் சங்க நிர்வாகிகள் கடந்த இரு வாரமாக நிர்வாகத்துடன் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பலனாக புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் 01-01-2007 முதல் 31-12-2012 வரை என காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் ஏற்கெனவே பெற்றுவந்த அடிப்படை சம்பளத்தில் 24 சதவீத ஊதிய உயர்வும் (ஊதிய நிர்ணயிப்பு அளவீட்டுத் தொகை), 3 சதவீத ஊதிய ஊக்கத் தொகை உயர்வும், சிறப்பு ஊதிய ஊக்கத் தொகை 1 சதவீதமும் அளிக்க நிர்வாகம் முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் தொழிற்சங்கத் தரப்பில் அடிப்படை சம்பளத்தில் 35 சதவீதமும், சிறப்பு இன்கிரிமென்ட் 3 சதவீதமும் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இது தவிர்த்து அலவன்ûஸ பொறுத்தமட்டில் 75 சதவீதம் உயர்வு கோரியிருப்பதாகவும் தெரிகிறது.  மேலும் சுரங்க அலவன்ஸ் மற்றும் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் தற்போது பேச்சு நடத்தி வருவதால் தொமுச தலைமை நிர்வாகிகள் ஒவ்வொரு பிரிவு வாரியாக தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு வருகின்றனர்.
 
                 மேலும் பேச்சுவார்த்தையில் உள்ள சங்கங்களுக்கிடையே சில கருத்து வேறுபாடுகளும் நிலவுவதாகத் தெரிகிறது. ஒரு சங்கம் சதவீத அடிப்படையில் அலவன்ஸ் வழங்க வேண்டும் என்றும், மற்றொரு சங்கமோ ரொக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோருவதாகத் தெரிகிறது. இதனிடையே பேச்சுவார்த்தையில் இல்லாத தொழிற்சங்கங்கள் ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குறித்து பல்வேறு விமர்சனங்களை செய்துவருவதால் தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவ ஆரம்பித்துள்ளது.÷தொழிலாளர்களோ பேச்சுவார்த்தை விவரம் எதுவும் தெரியாமல், மார்ச் மாத இறுதிக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இயக்குநர்கள் குழுக் கூட்டத்தின் ஒப்புதலுக்குப் பின் புதிய ஊகித அடிப்படையில் சம்பளமும், காலம் தாழ்ந்து ஏற்படும் ஒப்பந்தம் என்பதால் எப்படியும் ரூ.ஒரு லட்சம் அளவுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மெய்யாகுமா அல்லது பொய்யாகுமா என்பது இம்மாதம் 30-ம் தேதி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவுள்ள சம்பள ரசீதை பார்த்தால் தெரிந்துவிடும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior