உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

குறைந்த விலையில் உளுந்து கொள்முதல்


சிதம்பரம்:
 
                 சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருந்தும் செயல்பாடில்லை. மார்க்கெட்டிங் கமிட்டி அமைக்கப்படாததால் விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்ய இயலாமல் உள்ளது என வேளாண் உற்பத்தித் துறை ஆணையரிடம் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உளுந்து பயிர் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து சென்னை வேளாண் உற்பத்திதுறை ஆணையர் நந்தகிஷோர், வேளாண் இயக்குநர் கோசல்ராம் ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வாழக்கொல்லை, துணிசிரமேடு, உத்தமசோழகன், சிவாயம் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள விவசாயிகளிடம் உளுந்து பயிர் உற்பத்தி பெருக்குவது குறித்து என்ன செய்வது? என கலந்துரையாடினர். அப்போது விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் அதிகாரிகளிடம் தெரிவித்தது: இந்த ஆண்டு நாங்கள் வீட்டில் வைத்திருந்த குறைந்த விதையை பயன்படுத்தினோம்.  எனவே அடுத்த ஆண்டு விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் கூடுதலாக விதைகளை வழங்க வேண்டும். விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உளுந்து 100 கிலோ மூட்டை ரூ.4800-ம், பண்ருட்டியில் மூட்டை ரூ.4300-ம் வாங்குகின்றனர். ஆனால் மார்க்கெட்டிங் கமிட்டி இல்லாததால் சிதம்பரத்தில் தனியாரிடம் உளுந்தை மூட்டை ஒன்று ரூ.2800-க்கு விற்று வருகிறோம். சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருந்தும் மார்க்கெட்டிங் கமிட்டி இல்லாததால் உளுந்து கொள்முதல் செய்யப்படவில்லை. மேலும் வேளாண்துறையினர் விவசாயிகளிடம் கிலோ ரூ.31.80-க்கு உளுந்தை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் உளுந்து விதை ரூ.55-க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளிடம் குறைந்து விலைக்கு உளுந்து வாங்கப்பட்டு கூடுதல் விலைக்கு விதை விற்கப்படுகிறது. எனவே உளுந்து விதைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வேளாண் இயக்குநரிடம் பி.ரவீந்திரன் கோரிக்கை வைத்தார். கோரிக்கைகளை ஏற்று வரும் ஆண்டிலிருந்து சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மார்க்கெட்டிங் கமிட்டி மூலம் உளுந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் உளுந்து விலை நிர்ணயம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தனர். வேளாண் உற்பத்திதுறை ஆணையர் மற்றும் இயக்குநருடன் விவசாய சங்கத் தலைவர்கள் கார்மாங்குடி வெங்கடேசன், பட்டாம்பாக்கம் வேங்கடபதி, பண்ருட்டி நரசிம்மன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், உரக்கட்டு உதவி இயக்குநர் சுந்தரராஜன், விதை சான்று அதிகாரி கனகசபை உள்ளிட்டோர் உடன் சென்று உளுந்து பயிரிடப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior