உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

சிதம்பரம் நகரில் வீதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு


சிதம்பரம் தெற்குரத வீதியில் சாலையோரம் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள்.
 
சிதம்பரம்:

            சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் சாலையோரம் வணிக நிறுவனங்களினால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு நடக்கும் நிலை உள்ளது.

            சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் குறிப்பாக சிதம்பரம் மேலரத வீதி, தெற்குரத வீதி, கமலீஸ்வரன் கோயில் தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை இரவு நேரங்களில் சாலையோரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

           இந்த குப்பை மற்றும் கழிவுகளை நகராட்சியினர் காலை 10 மணி வரை அள்ளுவதில்லை. இதனால் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மூக்கில் துணியை கட்டிக் கொண்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அக்குப்பைகள் நகராட்சி பணியாளர்களால் முழுமையாக அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் வீதிகளில் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. 

                   குறிப்பாக சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள வணிக வளாக நிறுவனம் மற்றும் ஹோட்டல்களிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், அழுகிப்போன காய்கறிகள், பழங்கள் கொட்டப்படுகின்றன. வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் அவர்களது இடத்திலேயே குப்பைத் தொட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும். அக்குப்பைகளை நகராட்சி லாரி மூலம் எடுத்துச்செல்வது என்ற விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

           எனவே வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் கழிவு மற்றும் குப்பைகளை அவர்களது இடத்திலேயே தொட்டியில் வைத்து நகராட்சி குப்பை லாரி வரும் போது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற நகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.சாலையோரம் குப்பைகளை கொட்டினால் அந்நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பெ.மாரியப்பனிடம் கூறியது,

                   பிளாஸ்டிக் கழிவுகளை மற்றும் குப்பைகளை கொட்டும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் குப்பைகளை அதிகாலையில் அள்ளமுடியவில்லை என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior