உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

தமிழ் மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம்


அமெரிக்க பேராசிரயர் ஜார்ஜ் ஹார்ட்
 

கோவை :

               உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த மக்களிடையே பெரும் சோர்வு ஏற்பட்டது.

              உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை கொடிசியா சாலையிலுள்ள மாநாட்டு வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இம்மாநாட்டை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று காலை துவக்கி வைத்தார்.மேடைக்கு எல்லாத் தலைவர்களும் சரியான நேரத்துக்கு வந்து விட்டதால், திட்டமிட்டபடி காலை 10.30 மணிக்குத் துவங்கி விட்டது. தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. செம்மொழி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது, பொதுமக்கள் பெரும் உற்சாகமாக கைதட்டினர். ஜனாதிபதிக்கு முதல்வரும், மற்றவர்களுக்கு துணை முதல்வர் ஸ்டாலினும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.துணை முதல்வருக்கும், தலைமைச் செயலர் ஸ்ரீபதிக்கும் மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், நினைவுப்பரிசு வழங்கினார்.

                      அஸ்கோ பர்போலோவுக்கு வழங்கப்பட்ட, "கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது,' ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலையுடன், 10 லட்ச ரூபாய் பெறுமானம் உடையது என்று விளக்கப்பட்டது. மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட், சில வார்த்தைகளை தமிழில் பேசிவிட்டு, பின்பு ஆங்கிலத்தில் பேசினார்.அடுத்ததாக, வா.செ.குழந்தைசாமி பேசினார்.

                     அவருக்குப் பின், பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசினார். அவர் உட்கார்ந்தவாறே பேசியதால், அவருக்கு, "கார்டுலெஸ் மைக்' தரப்பட்டது. இடையிடையே அது தடைபட்டதால், முதல்வர் சற்று கடுப்பானார்.ஆனால், "மைக்' மாற்றப்படுவதற்கு முன்பே, அது சரியாகி விட்டது. அவர், ஐந்து நிமிடம் தமிழ் பேசும் வரை தகராறு செய்த "மைக்,' ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்ததும் சரியாகி விட்டது.

                     அடுத்ததாக, விருது பெறும் அஸ்கோ பர்போலோ குறித்து தமிழக நிதியமைச்சர் அன்பழகன் விளக்கிப்பேசினார். விருது பெற்ற அஸ்கோ பர்போலோவும், ஒரு சில வார்த்தைகளைத் தவிர முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். ஜார்ஜ் ஹார்ட், பர்போலோ இருவரும் பேசி முடிக்கும்போது, "தமிழ் வாழ்க' என்று கூறியபோது, சிலர் கை தட்டினர்.

முதல்வர் பேசுகையில், 

                 செம்மொழித் தகுதி வழங்குவது குறித்து சோனியா தனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே ஆங்கிலத்தில் படித்து, அதற்குரிய தமிழாக்கத்தையும் விளக்கினார்.

அவருக்குப் பின் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 

                        தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இருவருமே ஆங்கிலத்தில் பேசினர். முடிவில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் நன்றி தெரிவித்தார். தமிழ் மாநாட்டின் துவக்க விழா முழுவதும், ஆங்கில ஆதிக்கமே அதிகம் இருந்தது.ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் மொழி பெயர்க்கவும் எந்த ஏற்பாடும் செய்யப்படாததால், ஜனாதிபதி ஆங்கிலத்தில் பேசியபோது, மக்கள் சோர்வு அடைந்து பேசத்துவங்கி விட்டனர்.

* பந்தலுக்குள் வந்த சிலரை போலீசார் சோதனையிட்டபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தன. அவற்றையும், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டியையும் வாங்கி வைத்துக்கொண்டனர். ஒரு சிலர் கொடுக்க மனமில்லாமல், மண்ணைத் தோண்டி புதைத்துச் சென்றனர்.

* பல ஆயிரம் பேருக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு கொடுத்த இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. குறைவான எடையிலும், அதிக விலையிலும் இருந்ததாகக் கூறி, தனியார் உணவு நிறுவனங்கள் அமைத்திருந்த உணவுக்கூடம்-2க்குச்சென்று தேவையானதை வாங்கிச் சாப்பிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior