உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

டெல்டா பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: விவசாயிகள் கடும் அதிருப்தி

கடலூர்:

                 கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில்,​​ ரூ.2.5 கோடியில் நடைபெற்று வரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி,​​ திருப்திகரமாக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

                 காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி,​​ இந்த ஆண்டு ரு.​ 12 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.​ இதில் கடலூர் மாவட்டத்தில்,​​ 56 பாசன வாய்க்கால்கள் மராமத்துப் பணிக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.​ அணைக்கரை உள்கோட்டத்தில் 26 பணிகளும்,​​ சிதம்பரம் உள்கோட்டத்தில் 30 பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.​ ​தூர்வாரும் பணியை இயந்திரம் மூலம் செய்தால் கன மீட்டருக்கு ரூ.32.60-ம்,​​ ஆட்களைக் கொண்டு செய்தால் கன மீட்டருக்கு ரூ.26.80-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.​ இயந்திரங்களைக் கொண்டே பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.​ ​

                 பதிவேடுகளில் உள்ளபடி ​ சர்வேயர் மூலம் அளந்து,​​ கல் போட்டு,​​ ஆக்கிரமிப்புகளை அகற்றி,​​ தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று,​​ ஆண்டுதோறும் தெரிவிக்கப்படும் கோரிக்கை,​​ இந்த ஆண்டும் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் படுகை மட்டத்தை அளந்து,​​ அதற்கு ஏற்ப திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். படுகை மட்டத்தை கணக்கிடாமல் தூர்வாருவதால் வாய்க்கால்கள் அனைத்தும் பள்ளமாகி,​​ வயல்களுக்குள் தண்ணீர் பாய்வதில் சிரமம் ஏற்படுவதாந்வும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இப்பணிகளைக் கண்காணிக்க,​​ ஒவ்வொரு வாய்க்கால்களுக்கும் தனித்தனியே விவசாயிகள் கண்காணிப்புக் குழு ​(2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது போல்)​ அமைக்க வேண்டும் என்று விவசாயிகள்,​​ மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்திலும்,​​ பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் கோரிக்கை வைத்தனர்.​ 

                 ​எனினும் கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு,​​ திருப்தியற்ற நிலையில்,​​ பணிகள் நடைபெற்று வருவதாக,​​ விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.மேலும் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்து உள்ளன.​ மேட்டூர் அணையில் தண்ணீர் திருப்திகரமாக இருப்பதால்,​​ ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்பட்டால்,​​ வாய்க்கால்களில் தண்ணீர் ஓடி,​​ தூர்வாரும் பணி தடைபட்டு,​​ ஏனோ தானோவென்று மேற்கொள்ளப்பட்டு,​​ பணம் மட்டும் பட்டுவாடா செய்யப்படும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.இப்போதாவது...

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,​​ 

                 வாய்க்கால்களை அளந்து,​​ கல்போட்டு,​​ ஆக்கிரமிப்புகளை அகற்றி,​​ படுகை மட்டத்துக்கு ஏற்ப,​​ தூர்வாரவேண்டும் என்று கோரினோம்.​ ஒவ்வொரு வாய்க்காலுக்கும் விவசாயிகள் கண்காணிப்புக் குழு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரினோம்.​ ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.​  கண்காணிப்புக் குழுக்களுக்கு விவசாயிகளின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு,​​ பரிந்துரைக்கப்பட்டும் இருந்தது.​ ஆனால் உயர்மட்டத் தலையீடு காரணமாக,​​ அந்த கோப்பு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.​ 20 சதம் பணிகள்தான் முடிந்து உள்ளன.​ இப்போதாவது எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

பணம் மட்டும்...

கொள்ளிடம் கீழணை விவசாயிகள் சங்கத் தலைவர் கண்ணன் கூறுகையில்,​​ 

                   பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில்,​​ விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.​ வாய்க்கால்கள் பல ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.​ வாய்க்காலுக்கு 3 விவசாயிகள் கொண்ட கண்காணிப்புக் குழு பரிந்துரைக்கப்பட்டும்,​​ நடைமுறைப்படுத்தவில்லை.​ சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் நீர் நிரப்பி உள்ளதால்,​​ அனைத்து வாய்க்கால்களிலும் நீர் கசிந்து,​​ தூர்வார முடியாத நிலை உள்ளது.​ ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது.​ அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டால்,​​ தூர்வாரும் பணி முறையாக நடைபெறாமல்,​​ பணம் மட்டும் பட்டுவாடா ஆகும் நிலை உள்ளது என்றார். 

முன்னுதாரணம் இல்லை.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கொள்ளிடம் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் செல்வராஜிடம் கேட்டதற்கு,​​ 

                தூர்வாரும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.​ விவசாயிகள் கோரிக்கைப்படி,​​ கண்காணிப்புக்குழு அமைக்க முன்னுதாரணம் இல்லை.​ எனவே அமைக்கவில்லை.​ 56 பணிகளில் 30 பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.​ அதில் 50 சதவீதம் வேலை முடிந்துவிட்டது.​ மேட்டூர் அணை ஜூலை இறுதியில்தான் திறக்க வாய்ப்பு உள்ளது.​ அதற்குள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிடும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior