உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

மாங்குரோவ் காடுகளை அழிக்கும் அனல்மின் நிலையங்கள் கூடாது

கடலூர்:

                 மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று, கடலூரில் சனிக்கிழமை நடந்த உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                 தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு ஆகியவற்றின் சார்பில் உலக  சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. 

விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                    இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் அதிகம் உள்ள கடலூர் பிச்சாவரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பால் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிராக கடலூர் மாங்குரோவ் காடுகளுக்கு அருகே 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மாங்குரோவ் காடுகளுக்கு அருகே அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி கூடாது. இந்தியாவில் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் கடலூர் 16-வது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. கடலூர், நாகை மாவட்டங்களில் 250 ச.கி.மீ. பரப்பளவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மேலும் ரசாயன ஆலைகளையும், அனல்மின் நிலையங்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் நிறுவக் கூடாது. தற்போது உள்ள ஆலைகள் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

                    கூட்டமைப்பு சார்பில் பள்ளிகளில் அதிக அளவில் மரங்களை நடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் சிறப்புரை நிகழ்த்தினார். சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகள் நெய்வேலி தங்கம், பண்ருட்டி நடராஜன், மணிவண்ணன், சிப்காட் சுற்றுச்சூழல் கணகாணிப்புக் குழு உறுப்பினர்கள் புகழேந்தி, சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior