உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

விருத்தாச்சலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் தென்மாவட்ட ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதம்


                             விருத்தாச்சலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், தென்மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும், ஆறு மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சில ரயில்கள் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பல மணி நேரம் தவித்தனர். 

                     விருத்தாச்சலம் அருகே நேற்று முன்தினம் இரவு, ரயில்வே தண்டவாளத்தில், பெரிய மரம் ஒன்று திடீரென விழுந்தது. இதனால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள், தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்வே படையினர் மரத்தை வெட்டி, எடுத்து அப்புறப்படுத்த பல மணி நேரம் ஆனது.

              இதனால் சென்னை வந்து சேர வேண்டிய தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் ஐந்து, ஆறு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. வழக்கமாக காலை 5.10 மணிக்கு வர வேண்டிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அடுத்து வர வேண்டிய பாண்டியன், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தன. 6.40க்கு வர வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 11.50க்கும், 7.10க்கு வர வேண்டிய பொதிகை 1.10க்கும், 7.40க்கு வர வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதியம்1.30க்கும் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தன.

             காலை 8.20க்கு வர வேண்டிய ராமேஸ்வரம் -சென்னை எக்ஸ்பிரஸ் மதியம் 1.50க்கும், காலை 8.40க்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 2.10 மணிக்கும், 8.55 மணிக்கு வர வேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 2.30 மணிக்கும் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. நேற்று பகல் 12.40க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், இரண்டு மணி நேரம் தாமதமாக 2.35க்கு புறப்பட்டுச் சென்றது. உரிய நேரத்தில் புறப்படும் என்ற எதிர்பார்ப்பில் முன்கூட்டியே வந்த பயணிகள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலையத்தில் காத்துக் கிடந்தனர். ரயிலில் வரும் உறவினர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களும், ரயிலின் வருகைக்காக காத்துக் கிடந்ததால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior