உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை! தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

கடலூர் : 

                     பள்ளி திறந்து ஒரு வாரமாகியும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சமச்சீர் பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர்.

                    தமிழகத்தில் மாண வர்கள் "ஸ்டேட் போர்டு' மெட்ரிக், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களில் படித்து வருகின்றனர். இதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும், பாடச் சுமைகளை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக இந்த கல்வி ஆண்டில் (2010-2011) முதல் மற்றும் 6ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி திட் டத்தை அமல்படுத்தியுள்ளது.

                 இதற்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டுள்ளது. அதில் முதல் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச் சூழல் அறிவியல் ஆகிய நான்கு புத்தகங்கள் 200 ரூபாய், 6ம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப்புத்தகங்கள் 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு அந்தந்த பள்ளிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகமே நேரடியாக அனுப்பி வைத்தது.

                அதேப்போன்று தனியார் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாட நூல் கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்களுக்கு ஏற்ப முதல் வகுப் பிற்கு ஒரு செட் 190 ரூபாய், 6ம் வகுப்பிற்கு 237.50 ரூபாய் என கணக் கிட்டு "டிடி' எடுத்து கொடுத்து குடோனில் புத்தகங்களை பெற்றுக் கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டது.

                 இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக முதல் வகுப்பிற்கு 20 ஆயிரம் செட் புத்தகங்களும், 6ம் வகுப்பிற்கு 7,700 செட் புத்தகங்கள் கடலூரில் உள்ள பாடநூல் கழக குடோனுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

                 ஆனால் மாவட்டத்தில் உள்ள 112 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 228 நர்சரி பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் முதல் மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே தனியார் புத்தக நிறுவனங்கள் சில, தனியார் பள்ளி நிர்வாகிகளை அணுகி சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்திட அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும், ஆகையால் தங்களது கம்பெனி புத்தகங்களை வாங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

                           இதனால் எந்த புத்தகத்தை வாங்குவது என்ற குழப்பம் காரணமாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தமிழக அரசு பாட நூல் கழகத்தின் புத்தகங்களை வாங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனை அறிந்த கல்வித் துறை அதிகாரிகள் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றம் நர்சரி பள்ளிகளை தொடர்பு கொண்டு அரசு பாட நூல் கழகத்தில் தான் புத்தகங்கள் வாங்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பாட நூல் கழகத்திடம் புத்தகங்களை வாங்கத் துவங்கியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior